திங்கள், ஆகஸ்ட் 15

காதல் செய்யும் காலம்



கார்காலம் கண்ணாளா
  காதல் செய்யும் காலமடா
கூதிர்காலம் மன்னவா
  கூடிக் களிக்க வரமடா
போர்கோலம் பஞ்சணையில்
   புதியன தேடும் ஆர்வமா
நீர்கோலம் கன்னத்தில்
   நீயெனை பிரிய பாரமடா

பொருளீட்டும் பயணத்தில்
   பொலிவி ழந்ததென் மேனியடா
காரிருளில் புல்லினம்
   கலகலக்க வேதனை பெருகுதடா
ஏரிக்கரை பூங்காற்றும்
   ஏகாந்தமும் உனையே நினைவூட்ட
கோரிக்கை தலைவா
   கோலமயில் எனைகாண திரும்பிவா

பொருளா புன்னகையா
   பூவா தலையா வேண்டாமடா
அருகிருந்தால் தானடா
   ஆனந்த அன்பைச் சொல்லும்
பருகாத இளமை
   பஞ்சத்தில் பட்டினியால் மடியுமடா
சருகான முதுமையில்
   சதிராடுமோ சல்லாப காமமடா

கால்வயிற்று கூழானாலும்
   கண்ணாளா இணைந்தே குடிப்போம்
மேல்தட்டு வாழ்வானாலும்
   மேன்மையுடன் இணைந்தே வாழ்வோம்
யௌவனத்தில் பொருள்தேடி
    ஏந்திழையை பிரிந்து செல்வாயோ
கவனத்தில் கொள்ளடா
    கட்டியவள் காத்திருப்பேன் இளமையல்ல

வளைகுடா நாடோ
   வல்லரசு அமெரிக்க தேசமோ
வைஃபை வசதியோ
   ஸ்கைப்பில் பேசிப் பழகியோ
வாழும் வாழ்வில்
   வசந்தம் ஏதடா, கூறடா
நாளும் ஊடிகூடி
   நடத்திடும் வாழ்வே மகிழ்ச்சியடா

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...